நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட மூன்று பேரூராட்சிகள்: அரசிதழில் வெளியீடு

தமிழ்நாட்டில் மூன்று பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் 2023-2024ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை, 'ஸ்ரீபெரும்புதூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.

அப்போது அவரது கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 'ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்' என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அந்த பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இதனையடுத்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம், இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், மற்றும் தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது.

மேலும், இந்த அறிவிப்பு குறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலனை செய்த தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com