இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025
x
தினத்தந்தி 10 July 2025 9:10 AM IST (Updated: 11 July 2025 9:09 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 10 July 2025 9:41 AM IST

    செங்கடலில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதில், லைபீரிய நாட்டு கொடியுடன் வந்த எடர்னிட்டி சி என்ற சரக்கு கப்பலை கடுமையாக தாக்கினர். இதில் கப்பல் பணியாளர்கள் 3 பேர் பலியானார்கள்.

    கப்பலில் இருந்த 25 பேரில் 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், கிளர்ச்சியாளர்களின் கடுமையான தாக்குதலில் அந்த கப்பல் மூழ்க தொடங்கியது. அதனை மீட்பதற்கான முயற்சி பலனளிக்காமல் கப்பல் மூழ்கி விட்டது என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், பணியாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இது செங்கடல் பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

  • 10 July 2025 9:24 AM IST

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டூர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 'சுங்கச்சாவடி பாக்கி ரூ.276 கோடியை செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண மாநில போக்குவரத்துத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக இன்று (வியாழக்கிழமை) முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க அனுமதிக்கக்கூடாது' என உத்தரவிட்டது.

    இந்தநிலையில், தென்மாவட்ட சுங்கச்சாவடிக்கு தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்துவது தொடர்பான பிரச்சினை மாநில போக்குவரத்து துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் நல்ல ஒரு தீர்வை எட்ட உள்ளதாகவும், எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆஜராகி முறையிட்டார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

  • 10 July 2025 9:16 AM IST

    இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.

  • 10 July 2025 9:11 AM IST

    தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    சென்னையில் இன்று (10.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அம்பத்தூர்: கேலக்ஸி சாலை, பெரியார் தெரு, சிவபதம் தெரு.

    திருமுல்லைவாயல்: அம்பேத்கர் நகர் பிரதான சாலை, ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, கண்ணன்கோயில், ஆட்டந்தாங்கல் பாலம், கே.கே.நகர், சிவந்தி ஆதித்தனார் நகர், பெருமாள்நகர், வி.பி.ஆர்.நகர், சக்திநகர்.

    அடையாறு: பெசன்ட்நகர் 6 முதல் 15வது குறுக்குத் தெரு, 1வது, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ குடியிருப்பு, கக்கன் காலனி, 4வது, 16வது, 29வது குறுக்குத் தெரு, 2வது, 3வது, 7வது அவென்யூ, டைகர் வர்தாச்சாரியார் சாலை.

    சோழிங்கநல்லூர்: ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாமரை தெரு, சோமு நகர், தேவி கருவிழி நகர், யுனைடெட் காலனி, பெல் நகர் 4, 5 வது குறுக்கு தெரு, புஷ்பா நகர்.

    தாம்பரம்: மாடம்பாக்கம் பிரதான சாலை, சுதர்சன்நகர், விஜிபி, சரவணாநகர், ஸ்ரீதேவிநகர், அரவிந்த்நகர், கருமாரி அம்மன் நகர், அம்பிகாநகர், காயத்திரி கார்டன், பார்வதிநகர், சிவசக்திநகர், சீனிவாசநகர், சுந்தர் அவென்யூ, ரூபி.

    கோயம்பேடு மார்க்கெட்: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ்காந்தி நகர், ஜானகிராம் நகர், புவணேஸ்வரி நகர், ராமலிங்கநகர், தாமரைநகர் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story