இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Oct 2025 8:08 PM IST
மோகன்லாலின் “விருஷபா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விருஷபா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.
- 9 Oct 2025 8:02 PM IST
“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தின் டிரெய்லர் வெளியானது
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் "பிகில்" படத்தில் 'வெறித்தனம்' பாடலில் நடனமாடி அறிமுகமானார். அதனை தொடர்ந்து "மாஸ்டர், மகாராஜா, அந்தகன்" போன்ற படங்களிலும் நடித்திருந்தார். பூவையார், குக் வித் கோமாளி சீசன் 6-ல் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார்.
- 9 Oct 2025 7:40 PM IST
பெண்கள் உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பாக விளையாடி முறையே 37 மற்றும் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 94 ரன்கள் குவித்தார். சினே ராணா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 49.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.
- 9 Oct 2025 7:38 PM IST
வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்.22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அதற்கடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
- 9 Oct 2025 7:34 PM IST
23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, தென்காசி, நீலகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- 9 Oct 2025 7:32 PM IST
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இன்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்எல்எஸ். சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி. ஆர்.சண்முகப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.
- 9 Oct 2025 7:28 PM IST
புராதன சின்னம் - தமிழக அரசுக்கு உத்தரவு
புராதன சின்னங்கள், கோவில்கள், கட்டிடங்களை பாதுகாக்க புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும்.கோவிலுக்குள் அன்னதான கூடம், பக்தர்கள் காத்திருப்பு கூடம், யானை நினைவு மண்டபம் போன்ற கட்டுமானங்களை கட்டக் கூடாது. விரைவில் ஆணையத்த அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 9 Oct 2025 7:27 PM IST
கேரளா வரும் மெஸ்ஸி
நவ. 14ஆம் தேதி மெஸ்ஸி தனது அணியினருடன் கேரளா வருகை; நவ. 17ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெறும். கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை அக். 15ஆம் தேதி தொடங்க இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
- 9 Oct 2025 7:07 PM IST
பெண் பணியாளர்களின் மாதவிடாய் காலத்தில்... மகிழ்ச்சி செய்தி தந்த கர்நாடக அரசு
அரசு, தனியார் நிறுவனங்கள், ஆடை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க கர்நாடக மந்திரி சபையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
- 9 Oct 2025 6:50 PM IST
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்; தவெக மாவட்ட செயலாளர் கைது
ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து தாக்கிய புகாரில் தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஏற்றிச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து தாக்கியதாக புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலைய போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















