இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jan 2025 8:55 PM IST
டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்
டெல்லியில் மத்திய மந்திரி ஜி. கிஷன் ரெட்டியின் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று மக்களுக்கு அவருடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
- 13 Jan 2025 8:49 PM IST
37 மாவட்டங்களில் 746 சாலைகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
- 13 Jan 2025 7:06 PM IST
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் தொடக்கம்
சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டு துறையின் சார்பில், பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கின. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடலில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்துள்ளார்.
- 13 Jan 2025 6:16 PM IST
ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
- 13 Jan 2025 5:46 PM IST
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மகர சங்கராந்தி திருவிழாவை முன்னிட்டு சர்வதேச பட்டம் விடும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விலங்குகள், பறவைகள், விளையாட்டு பொம்மைகள், கார்ட்டூன் சேனல்களில் இடம் பெற்ற உருவங்கள், கடல்வாழ் உயிரினங்கள் பட்டங்களாக பறக்க விடப்பட்டன.
- 13 Jan 2025 5:06 PM IST
உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா நிகழ்ச்சியில், கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளான இன்று 1 கோடி பேர் நீராடியுள்ளனர் என டி.ஜி.பி. பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.







