இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 May 2025 10:47 AM IST
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ நகரில் சிங்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஆபரேஷன் திராஷி என்ற பெயரில் நடந்து வரும் இந்த மோதலில், கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனை ஒயிட் நைட் படையினர் வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவு தெரிவிக்கின்றது.
- 22 May 2025 10:05 AM IST
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11பேர் கொழும்பில் இருந்து சென்னை வந்தனர்.பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு காரில் சென்றனர். மத்திய - மாநில அரசுகள் ஏற்பாட்டில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
- 22 May 2025 10:05 AM IST
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில், இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.
- 22 May 2025 10:02 AM IST
சென்னை மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
- 22 May 2025 9:47 AM IST
தென்ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். வெள்ளை மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேசினார்.
ராமபோசா உடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் ஒன்றாக நடத்தினார். அப்போது, ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி ராமபோசாவிடம், டிரம்ப் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். சமீபத்தில் வெளிவந்த செய்திகள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை சான்றாக கையில் வைத்திருந்த டிரம்ப் அவற்றை பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டு பேசினார்.
- 22 May 2025 9:37 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை ஆகிறது.
- 22 May 2025 9:37 AM IST
சிவகங்கை கல்குவாரி விபத்து - பலி 6 ஆக உயர்வு
சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
- 22 May 2025 9:35 AM IST
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா ஆற்றின் நீர் வரத்து இன்று காலை விநாடிக்கு 50ல் இருந்து 130 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் கிருஷ்ணா ஆற்றில் நீர் திறப்பு விநாடிக்கு 2500 கன அடியாக உள்ளது.
- 22 May 2025 9:17 AM IST
பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு இன்று வருகை தருகிறார். ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவற்றில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் மற்றும் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதும் அடங்கும்.
அவர் தேஷ்னோக் பகுதியில், மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையம் ஒன்றை தொடங்கி வைப்பதுடன், அந்த பகுதியில் உள்ள புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். பலானா பகுதியில் நடைபெறவுள்ள பொது கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு அவர் பேச இருக்கிறார்.











