இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Feb 2025 6:24 PM IST
ஈஷா மஹாசிவராத்திரி - பிரதமர் மோடி வாழ்த்து
மஹாசிவராத்திரி, ஆன்மீக ரீதியில் நம்மை மேன்மைபடுத்தும் தன்மைக்கான பக்தியையும், மதிப்பையும் ஏற்படுத்துகிறது
மஹாசிவராத்திரி விரதம், தியானம், சுயபரிசோதனைக்கான தருணமாகவும், அறியாமையின் மீதான அறிவின் வெற்றியை குறிக்கிறது
சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும்
ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து
- 23 Feb 2025 6:14 PM IST
நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரம் அருகே திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் டிப்பர் மீது மோதி விபத்தில் சிக்கியது.
- 23 Feb 2025 5:55 PM IST
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வலுவான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 23 Feb 2025 5:53 PM IST
தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்களை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் பொதுமக்கள், போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- 23 Feb 2025 4:56 PM IST
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி குண்டுமழை பொழிந்து கொன்றது.
இந்த தாக்குதல் நடந்து பல மாதங்களானாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நடைபெறாமல் தள்ளி போனது. இந்த சூழலில், லெபனானில் உள்ள மிக பெரிய விளையாட்டு திடலில் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு 5 மாதங்களுக்கு பின்னர் இன்று நடைபெற்றது.
இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கடும் குளிரிலும் நடந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
- 23 Feb 2025 4:09 PM IST
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி-தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் பங்கேற்று பேசிய மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், புதிய உலகின் சவால்களுக்கு ஏற்ப, புதிய கல்வி கொள்கை வழியே மக்களை நாம் தயார்படுத்த முயற்சித்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
ஏ.ஐ. மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியையும் அவர் வலியுறுத்தி கூறினார்.
- 23 Feb 2025 3:59 PM IST
மத்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி திமுகவினர் அழித்தனர்.
- 23 Feb 2025 3:00 PM IST
வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்காக வரும் 24ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை சென்னை முழுவதும் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக தினசரி 2 முதல் 10 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம் நடைபெறும் இடங்கள் தொடர்பான விவரங்களை http://tnuhdb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில், பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கிரையப் பத்திரம் மற்றும் பட்டா பெற்று பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Feb 2025 2:51 PM IST
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடரும் இலங்கை கடற்படையின் கைதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- 23 Feb 2025 2:51 PM IST
உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் 92 சதவீதம் அளவுக்கு மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட், பயணிகள் ரெயில்கள் மற்றும் மெமு சேவைகளும் செயல்படுகின்றன. இவற்றுடன் 472 ராஜ்தானி மற்றும் 282 வந்தே பாரத் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.






