இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Feb 2025 12:30 PM IST
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மரியாதை செலுத்தினார்.
- 24 Feb 2025 12:09 PM IST
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இரு இடங்களில் முதல்வர் மருந்தகம் கடைகளை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன்.
- 24 Feb 2025 12:07 PM IST
தவெக-வின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியை நாளை மறுதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவெக நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்துகொள்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 24 Feb 2025 12:05 PM IST
அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாவது தொடர் கதையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு சிறப்பாக இருந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 24 Feb 2025 12:03 PM IST
3-வது அவதார திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் -4ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ல் பொதுத்தேர்வு இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 15-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் கூறியுள்ளார்.
- 24 Feb 2025 11:58 AM IST
நெல்லையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் நிர்வாகிகள் திட்டிக்கொண்டனர். மூத்த நிர்வாகிகள் தலையீட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
- 24 Feb 2025 11:56 AM IST
சிவராத்திரி விழா - பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஈஷா மையம் விதிகளை பின்பற்றி உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- 24 Feb 2025 11:52 AM IST
அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி செல்வராஜ் பங்கேற்றுள்ளனர்.
- 24 Feb 2025 11:23 AM IST
அதிமுக பல அணிகளாக பிளவுற்று சிதைந்து கிடக்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி அமையும். அதற்கு எங்களால் முடிந்தவற்றை செய்வோம். அதிமுகவின் வெற்றிக்கு ஏதாவது நற்பணிகள் செய்ய அழைத்தால் செயல்படுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
- 24 Feb 2025 11:19 AM IST
கரூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை மாணவன் அறுத்துள்ளான். மாணவியின் கழுத்தை அறுத்த பிளஸ் 2 படிக்கும் மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் இதுபோன்ற செயலை செய்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.








