இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 May 2025 9:58 AM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது
மத்திய மராட்டியத்தில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- 25 May 2025 9:54 AM IST
கன்னியாகுமரி: வார இறுதி நாளான இன்று குமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், சூரிய உதயத்தை காணாமல் ஏமாற்றம் அடைந்தாலும், மழையில் நனைந்தபடி, கடலில் குளித்து உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 25 May 2025 9:52 AM IST
டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று இன்று காலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தரகாண்ட், கோவா, மத்திய பிரதேசம், அசாம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் வருகை தந்துள்ளனர்.
இதேபோன்று, மராட்டியம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் துணை முதல்-மந்திரிகளும் வருகை தந்துள்ளனர்.
- 25 May 2025 9:28 AM IST
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சசி தரூர் எம்.பி., இன்று காலை அளித்த பேட்டியில், இந்தியர்கள் உள்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, நாங்கள் இணைந்து வந்துள்ளோம். உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள, நாம் ஒன்றாக போராட வேண்டிய விசயம் இதுவாகும்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக எந்தவித குற்ற விசாரணையோ, தீர்ப்போ இல்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழிக்கும் எந்த முயற்சியும் இல்லை. பதிலாக, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை செய்ததற்காக, பாகிஸ்தான் எதிர்விளைவை பெற போகிறது. நாங்கள் அதற்காக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு, துல்லியத்துடன் பதில் தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என கூறியுள்ளார்.








