”கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கே முழு அதிகாரம்” - தவெக கூட்டத்தில் தீர்மானம்
தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தவெக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.
அவை;-
தீர்மானம் 1 :
ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 2:
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 3 :
இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4 :
அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நல்ல விசயம். ஒரு நல்ல விசயத்திற்காக பாமக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தை தமிழக வெற்றிக்கழகம் பெற்றுக் கொண்டுள்ளது. நிச்சயம் கட்சித் தலைவரிடம் இது குறித்து ஆலோசித்து ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.








