நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த வைகோ

கோப்புப்படம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
மேலும், 100 வயதான நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலை அவரது உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதெனவும் தெரிவித்தது.
இந்த நிலையில், நேற்று இரவு நல்லகண்ணு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லகண்ணு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தகைசால் தமிழருமான நல்லகண்ணு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார். மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (25.08.2025) மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ள மருத்துவர்களிடமும், அவரது உறவினர்களிடமும் நலம் விசாரித்தார். அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






