மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10,850 கன அடியாக குறைவு


மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10,850 கன அடியாக குறைவு
x

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது.

சேலம்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த வாரம் வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீரின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

கடந்த 20-ந்தேதி அதிகாலை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இதன் காரணமாக நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது 4 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீர் 15 ஆயிரம் கன அடியில் இருந்து 10,850 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

1 More update

Next Story