கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மதுரை காவல் ஆணையரிடம் நீதிபதி கேள்வி

பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டது என்று அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மதுரை காவல் ஆணையரிடம் நீதிபதி கேள்வி
Published on

மதுரை,

திருப்பரங்குன்றத்தில் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பார் என்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று மீண்டும் விசாரித்தார். அப்போது நீதிபதி கூறியதாவது: தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை; ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதியிடம் அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. அப்போது உடனே காணொலியில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; உடனே ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காணொலி வாயிலாக மதுரை காவல் ஆணையர் ஆஜரானார்.

அப்போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, 3.30  மணி முதல் பேரிகாடுகளை போட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தோம் என்று அவர் கூறினார். அப்போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு எப்போது பரிந்துரை செய்தீர்கள்? என்று நீதிபதி கேட்டார். இதற்கு, மாலை 5.45 மணியளவில் பரிந்துரைக்கப்பட்டது என்று காவல் ஆணையர் கூறினார். மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கூடாது, நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றும் காவல் ஆணையர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com