அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி தீவிரம்

12 பொக்லைன் இயந்திரங்கள், 4 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை, வங்கக்கடலில் நாளை மறுதினம் மோன்தா என்ற புயல் உருவாக உள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 பொக்லைன் இயந்திரங்கள், 4 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையினரால் செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. முகதுவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும்.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமானதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.10.2025 அன்று அடையாறு முக துவாரத்திற்கு திடீராய்வு மேற்கொண்டு நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு ஆற்றின் முகதுவாரத்தை அகலப்படுத்தும் பணியினை கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மண் திட்டுக்களை அகற்றி அடையாறு வெள்ளநீர் விரைவாக வடிய ஆணையிட்டார்.
இதனைத் தொடர்ந்து 24.10.2025 அன்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி (JCB) இயந்திரங்களுண்டு போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறையினரால் அடையாறு ஆற்றின் முக துவாரத்தின் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






