வீடு புகுந்து வாலிபருக்கு கத்திக்குத்து - மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவியின் கள்ளக்காதலன் வீடுபுகுந்து வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ் (26 வயது). இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், 2 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஜீவாவுக்கும், பிரேம்குமார் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த ஜீவாவின் கணவர் அப்புன்ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததாகவும், இதனால் ஜீவா, பிரேம்குமார் உடனான உறவை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்புன்ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று என்னுடன் உறவில் இருக்கும் உன் மனைவியை எப்படி பிரிக்கலாம் என கேட்டு அப்புன்ராஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்புன் ராஜை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு அப்புன்ராஜ் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த பிரேம்குமார் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அப்புன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி தாலுகா போலீசார் தப்பி ஓடிய பிரேம்குமாரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே வீடு புகுந்து வாலிபரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






