ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை - உருக்கமான கடிதம்


ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை - உருக்கமான கடிதம்
x

பொன் ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி பொன் ஆனந்தி (வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2½ வயதில் புகழினி என்கிற பெண் குழந்தை உள்ளது.

பிரகாஷ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பொன் ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இதனால் தனது மகளை பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெற்றோர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

கடந்த 3-ந்தேதி பாவூர்சத்திரத்துக்கு சென்ற பொன் ஆனந்தி தனது மகளை பார்த்துவிட்டு மீண்டும் சிவகிரிக்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் அவரின் வீட்டுக்கு மாமியார் செல்வி சென்றார். நீண்டநேரம் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதனால் செல்வி தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டுக்குள் பொன் ஆனந்தி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து தகவலறிந்ததும் சிவகிரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது அறையில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், ‘‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவு எடுத்துள்ளேன்’’ என பொன் ஆனந்தி உருக்கமாக எழுயிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பொன் ஆனந்தி தனது பணிக்கு மத்தியில் அடிக்கடி ஆன்லைனில் விளையாடியுள்ளார். அதில் ரூ.63 ஆயிரம் இழந்ததால் மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் அவருக்கு திருமணம் ஆகி 3½ மூன்றரை ஆண்டுகளே ஆவதால் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அனிதா தலைமையிலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story