காதலனுடன் ஏற்பட்ட தகராறில் விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்

கோவை பீளமேட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தனியார் விடுதியின் 4-வது மாடியில் இருந்து இளம்பெண் குதித்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த வாலிபர் இளம்பெணை பார்ப்பதற்காக நேற்று மாலை பீளமேட்டிற்கு வந்தார். பின்னர் அந்த வாலிபரும், இளம்பெண்ணும் விடுதியின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த இளம்பெண் வேகமாக தனியார் விடுதிக்குள் சென்றார். இதனால் வாலிபரும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் இளம்பெண் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com