25 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிலையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, கன்னியாகுமரி, நாமக்கல், பெரம்பலூர், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






