ஆஸ்திரேலியாவில் பயங்கரம்; துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எனது எண்ணம் உள்ளது. அங்குள்ள காவல் அதிகாரிகளுடன் பேசி, சூழல் குறித்த தகவல்களை பெற்று வருகிறேன்.
துப்பாக்கி சூடு நடைபெற்ற இடம் அருகே உள்ள மக்கள் போலீசாரின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? பயங்கரவாத நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






