நைஜீரியா: கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலி

நைஜீரியாவில் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியா: கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலி
Published on

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நைஜீரியாவின் தக்சட் பகுதியில் கால்நடைகளை கடத்தும் கும்பலை தடுக்க ராணுவ வீரர்கள் நேற்று பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் கடத்தல் கும்பலை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com