பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; பயணிகள் 8 பேர் பலி

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் போர்னோ மாகாணம் டம்புரா - மைடுகுரி நெடுஞ்சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அப்போது பஸ்சை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளால் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்தது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.






