உடல்பருமனுக்கும் ஒபீசோஜெனுக்கும் என்ன சம்பந்தம்?


உடல்பருமனுக்கும் ஒபீசோஜெனுக்கும் என்ன சம்பந்தம்?
x

ஸ்மார்ட் உலகில் எல்லோருக்கும் தங்களுடைய தோற்றம் குறித்த கவனம் இருக்கிறது. எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்றே கருதுகின்றன. அதற்காக உடற்பயிற்சி, உணவுமுறை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனினும் ஒரு சிலருக்கு உடல் பருமன் பிரச்னை இருந்துக் கொண்ட இருக்கிறது. அதில் இருந்து மீண்டுவர பல்வேறு முயற்சிகளை, எடுத்துக் கொண்டு அதில் தோல்வி ஏற்பட்டு பின்வாங்குபவர்களும் உள்ளனர். உடல் பருமன் பிரச்னையை குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.

'உடல் பருமன்' அல்லது 'எடை குறைப்பு' என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது, உடனடியாக நம் மனதில் ஆரோக்கியமற்ற உணவுமுறை அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை ஆகியவையே தோன்றும். ஆனால், உடல் எடை அதிகரிக்க, அதிகம் அறியப்படாத மற்றொரு காரணியும் உள்ளது. நாம் ஆரோக்கியமான உணவு உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் இக்காரணத்தால் நமது உடல் எடை அதிகரிக்கலாம். சமீபத்திய ஆண்டுகளில், சுற்றுச்சூழலில் உள்ள சில ரசாயனக் கலவைகள் மக்களில் எடையை அதிகரிப்பதில், அல்லது உடலைப் பருமனாக்குவதில் பங்காற்ற முடியும் என்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ரசாயனக் கலவைகள் ஒபீசோஜென்கள்என்று அழைக்கப்படுகின்றன.

அஜீரணம் மூலமாகவோ, மாசுபட்டக் காற்றைச் சுவாசிப்பதாலோ, இந்த ரசாயனங்களோடு தொடர்பு ஏற்பட்டால் நமது வெள்ளைக் கொழுப்புத் திசுக்கள் அல்லது கொழுப்பு நிறையின் அளவு அதிகரிக்கிறது. இன்றுவரை, சுமார் 50 இரசாயனங்கள் ஒபீசோஜென்கள் அல்லது ஒபீசோஜென்களாக இருக்கக் கூடும் என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றன. கேட்மியம், ஆர்செனிக் போன்ற உலோகங்கள் ஆகிவயை, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் ஒபீசோஜென்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், இந்த ரசாயனங்கள் அனைத்தும் டிடெர்ஜென்ட்கள், உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் காணப்படுகின்றன. உண்மையில், இந்த பொருட்கள் தம்மளவில் உடல் பருமனை கூட்டுவதில்லை. ஆனால் வெவ்வேறு வழிகளில் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. உதாரணத்திற்கு, அவை அடிபோசைட்டுகள் எனப்படும் கொழுப்பு செல்கள் பெருகுவதை ஊக்குவிக்கின்றன. வேறுவிதமாகக் கூறினால், அவை கொழுப்பு அதிகரிப்பதற்குக் காரணமான இந்த உயிரணுக்களின் எண்ணிக்கையையும் அளவையும் அதிகரிக்கின்றன.

வெள்ளைக் கொழுப்பு திசுக்களின் அதிகரிப்பு உடல் பருமன் அதுசார்ந்த வளர்ச்சிதை நோய்களை உருவாக்கும். இது பல்வேறு உறுப்புகளில், குறிப்பாக கல்லீரலில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அமிலங்களின் திரட்சியை ஏற்படுத்தும். அதேபோல், இந்த ஒபீசோஜென்களோடு தொடர்பு ஏற்படுவதன்மூலம் ஹார்மோன்களின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஹார்மோன்கள் பாலியல் ஹார்மோன்கள் அல்லது தைராய்டு ஹார்மோன்கள் வகையைச் சேர்ந்தவை. இவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையவை. இதற்கும் மேலாக, இந்த ரசாயனங்கள் குடல் நுண்ணுயிரிகளையும் பாதிக்கலாம்.

கொழுமியங்கள் எனப்படும் லிபிட்-களை உறிஞ்சுவதைச் சீர்செய்யும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் இவை. இவற்றின் எண்ணிக்கை குறைவது இரண்டாம் நிலை நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற வளர்சிதை மாற்ற நோய்களை ஏற்படுத்தும். ஒபீசோஜென்களோடு எப்போது நமக்குத் தொடர்பு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் விளைவுகள் மாறுபடும். மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கட்டங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களாகும். கருவில் இருக்கும்போது அல்லது ஆரம்ப குழந்தை பருவம், அப்போது வளர்ச்சி மிக விரைவாகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருக்கும். அந்நிலையில் ஒபீசோஜென்களோடு தொடர்பு ஏற்பட்டால், அது ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆரம்பகால வளர்ச்சியின் போது ஒரு நபரைச் சுற்றியுள்ள சூழல் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்தும். இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் சில நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தும். நோயை உண்டாக்கும் காரணிகள் நேரடியாக இல்லாவிடிலும் இந்த தாக்கங்கள் தொடர்ந்து இருக்கும். வளர்ச்சியின் முக்கியமான தருணங்களில் மேற்கூறிய நச்சுப்பொருட்களோடு தொடர்பில் வருவது மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்தும். இவை எபிஜெனிடிக் மாற்றங்கள் எனப்படும். அதாவது மரபணு வரிசையில் மாற்றம் ஏற்படுத்தாதவை. இது மரபணு தனது குணாதிசயங்களை வெளிப்படுத்துவதை மாற்றலாம். இதனால் செல்களின் செயல்பாடுகளும் மாறலாம். இதன்மூலம் உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்ற நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பிரச்னை இத்துடன் நின்றுவிடவில்லை.

விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இந்த மாற்றங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாற்றங்கள் பரம்பரையாக வரலாம். ஒபீசோஜென்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருப்பது? ஏற்கனவே குறிப்பிட்டபடி, நாம் நமது அன்றாட வாழ்வில் ஒபீசோஜென்களோடு வாழ்ந்தாலும், சில நடைமுறைகள் மூலம் அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள் உட்கொள்வதைக் குறைப்பது, பிளாஸ்டிக், அழகுசாதனப் பொருட்கள், லோஷன்கள் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது, பூச்சிக்கொல்லிகள் உள்ள உணவுகள் உட்கொள்வதைக் குறைப்பது, முடிந்தவரை அனைத்தையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவது முக்கியமாக, பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இதனுடன், ஒபீசோஜென்களைப்பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதும் அவசியம்.

உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்:

தற்போது உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்நாட்களில் இது ஒரு நோயாகவே கருதப்படுகிறது. ஏனெனில் உடல் பருமன் நீரிழிவு, கொலஸ்ட்ரால், பக்கவாதம் மற்றும் குழந்தையின்மை போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் பிரச்சனை சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்கள் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறார்கள். பலர் ஜிம் சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். பலர் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தி பல கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும், பலருக்கு உணவு முறை பற்றிய சரியான புரிதல் இல்லை. எனவே அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களின் எடை குறைவதில்லை.

சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கலாம். ஆனால், நாம் எந்த வழியை பின்பற்றினாலும் அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதிக சிரமம் இல்லாமல் உடல் எடையை விரைவாக குறைக்கும் சில எளிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். காலையில் எலுமிச்சை நீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெப்பத்தை உருவாக்குகிறது மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. வேகமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த எளிய முறையை பின்பற்றி பார்க்க வேண்டும்.

சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. உணவு உண்ட பிறகு சாலட் சாப்பிடுவது செரிமானத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த சாலட்டை சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், அதிகப்படியான உணவைத் தவிர்க்கலாம். உணவிற்கு முன் சாலட் சாப்பிடுவதால் வயிறு நிரம்பி, குறைவாகச் சாப்பிடுவோம், அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிக கலோரிகளை நாம் உட்கொள்ளாமல், குறைவான கலோரிகள் உடலுக்குச் செல்லும். இதன் மூலம் உடல் எடையும் வேகமாக குறையும். இரவில் ரொட்டி மற்றும் சாதம் இரண்டையும் தவிர்க்கவும். அரிசி மற்றும் ரொட்டி இரண்டிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. இரவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்பதால் உப்பசம் மற்றும் எடை கூடும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிக எடை கொண்டவர்கள் இரவில் சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்டோகிரைன் சொசைட்டியின் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில், இரவில் தாமதமாக சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உணவை தாமதமாக சாப்பிடுவதால், உடல் கொழுப்பை சரியாக எரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே சாப்பிட வேண்டும். இதன் காரணமாக, உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு ஆற்றலாக மாறத் தொடங்குகிறது. ஆகையால் இரவு நேரத்தில் 7 மணிக்குள் உணவு உட்கொள்வதை பழக்கமாக்கிக்கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த தயிர், நெய், வெண்ணெய், சீஸ், இனிப்பு, பேக்கரிப் பண்டங்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு வடை, பஜ்ஜி, போண்டா, பீட்சா, பர்கர், சேவு, சீவல், சிப்ஸ், பப்ஸ், லேஸ், கடலைப்பருப்பு, கார்ன் ஃபிளேக்ஸ், முறுக்கு, மிக்சர், கார வகைகள், விதவிதமான ரொட்டிகள் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது. பதிலாக வேர்க்கடலை, எள்ளுருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழச் சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள். மாலையில் பழச்சாறு/காய்கறி சூப் சாப்பிடுங்கள். ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கோக், குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். புரோட்டா, நூடுல்ஸ், ருமாலி ரொட்டி, ஃபிரைடு ரைஸ், நாண், பட்டர் நாண், பேல் பூரி, பானி பூரி போன்ற ஹோட்டல் உணவு வகைகளில் கலோரி மிக அதிகம். இவற்றைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

கீரைகள், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய் நமக்குத் தேவை. கிழங்குகள், மா, வாழை, பலா, சீத்தா, அத்தி, திராட்சை, சப்போட்டா ஆகியவற்றில் கலோரி அதிகம். ஆகவே, இவற்றைத் தவிருங்கள். பதிலாக, கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. விரதம் இருக்காதீர்கள்; அடிக்கடி விருந்துக்கும் ஹோட்டலுக்கும் செல்லாதீர்கள். டிவி முன்னால் உட்கார்ந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். மது அருந்தாதீர்கள்.

தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி வேண்டாம். முட்டையில் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம். மஞ்சள் கரு ஆகாது. ஃபிரைடு சிக்கன், தந்தூரி சிக்கன், ஆம்லெட் போன்ற எண்ணெயில் தயாரித்த அசைவ உணவு வகைகள் வேண்டாம். சமையலுக்குச் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் அளவு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 15 மி.லி. தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி ஆகியவற்றில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமுள்ளது. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, கொழுப்பு அதிகமாகி உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆகவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும். நினைத்தால் எண்ணெய் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்க முடியும்.


Next Story