மாணவர்களின் திறன்களை வளர்ப்போம்..! இன்று உலக சிந்தனை தினம்..!


மாணவர்களின் திறன்களை வளர்ப்போம்..! இன்று உலக சிந்தனை தினம்..!
x

உலகம் முழுவதும் உள்ள பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் அதிகாரம் மற்றும் மேம்பாட்டிற்காக நிதி திரட்ட உலக சிந்தனை தினம் உதவுகிறது.

நம்முடைய செயல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது சிந்தனைதான். சிந்தனை இல்லை என்றால் அறிவியலும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே, முன்னேற்றப் பாதைக்கான வழிகாட்டியாக இருக்கும் சிந்தனைத் திறனை மேம்படுத்தவேண்டியது அவசியம். இதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதி 'உலக சிந்தனை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

உலகச் சிந்தனை தினத்தின் வரலாறு 1926ஆம் ஆண்டில் தொடங்கியது. 1926ல் நியூயார்க்கில் உள்ள கேம்ப் எடித் மேசி என்ற இடத்தில் நான்காவது பெண் சாரணர் சர்வதேச மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முடிவில், சாரணர் மற்றும் வழிகாட்டி இயக்கத்தின் நிறுவனர் லார்ட் பேடன்-பவுல் மற்றும் அவரது மனைவி லேடி பேடன் பவுல் ஆகியோரின் பிறந்த நாளான பிப்ரவரி 22-ம் தேதியை, வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து, உலக சிந்தனை தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள்: 'நமது உலகம், நமது சிறந்த எதிர்காலம்'ஆகும். அதாவது, பெண்கள் முன்னேற வாய்ப்புள்ள நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த கருப்பொருள். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாலின சமத்துவம், அமைதி மற்றும் வறுமை உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளையும் ஆராய்கிறது.

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த நாள் உள்ளது. இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களை அடையாளம் காணவும் இந்த நாள் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வலிமை மற்றும் மன உறுதியைக் கொண்டாடும் நாளாகவும் இது உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 மில்லியன் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் அதிகாரம் மற்றும் மேம்பாட்டிற்காக நிதி திரட்டவும் இந்த நாள் உதவுகிறது.

உலகம் முழுவதும் சிந்தனைத் திறனை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன் முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது.

சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்யவும், சான்றுகளை மதிப்பீடு செய்யவும் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுக்கவும், கல்வி மற்றும் அதற்கு அப்பால் வெற்றி பெறவும் விமர்சன சிந்தனை உதவுகிறது. 2024 உலக சிந்தனை தினத்தை நாம் நினைவுகூரும்போது, சிந்தனைமிக்க தலைமுறைக்கான அடித்தளமாக, மாணவர்களிடையே விமர்சன சிந்தனை திறன்களை வளர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

1 More update

Next Story