5-வது டெஸ்ட்: அவசரப்பட்டு ஓடி ரன் அவுட் ஆன சுப்மன் கில்.. வீடியோ வைரல்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் 21 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
லண்டன்,
இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 2 ரன்களிலும், கே.எல். ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர்.
இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் மழை காரணமாக ஏறக்குறைய 2 மணி நேரங்கள் நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. சுப்மன் கில் - சாய் சுதர்சன் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்குள் வந்தனர். ஆட்டம் தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 21 ரன்களில் தேவையில்லாமன் ஓடி ரன் அவுட் ஆனார்.
கஸ் அட்கின்சன் வீசிய 27-வது ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில் அதனை அடித்து விட்டு ரன் எடுக்க வேகமாக ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்த சாய் சுதர்சன் வேண்டாம் என்றார். இதனையடுத்து சுப்மன் கில் மீண்டும் கிரீசுக்குள் செல்ல ஓடினார். அதற்குள் பந்தை பிடித்த கஸ் அட்கின்சன் ஸ்டம்பை நோக்கி துல்லியமாக அடித்து சுப்மன் கில்லை ரன் அவுட் செய்தார். இதனால் சுப்மன் கில் 21 ரன்களில் அதிருப்தியுடன் வெளியேறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்து கருண் நாயர் களமிறங்கினார். இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் அடித்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. சாய் சுதர்சன் 28 ரன்களுடனும், கருண் நாயர் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.






