உணர்ச்சிவசப்படும் நபர்.. கம்பீர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு.. - டி வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதால் கம்பீர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
உணர்ச்சிவசப்படும் நபர்.. கம்பீர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு.. - டி வில்லியர்ஸ்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.

கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். தோல்விக்கு அவர் கூறிய விளக்கமும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் தற்போதைக்கு கம்பீரை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கம்பீர் உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் அவர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- இந்திய அணியின் தோல்வி தர்மசங்கடமானதும், கடினமானதுமானது. தலைமையைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல.

இப்படிக் கூறும்போது, திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வதாக ஆகாது. சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். கம்பீருக்கு பயிற்சியாளராகும் அனுபவம் உள்ளது.

கம்பீர் குறித்த கேள்வி கடினமானது. தென் ஆப்பிரிக்க அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய பயிற்சியாளரான சுக்ரியுடன் நான் பணியாற்றியதில்லை. காம்பீர், ரியான் டென் டஸ்கேட், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை. வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது.

ஆனால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிப்பார். முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் தலைமையின் கீழ் நான் விளையாட விரும்புவேன். அவரும் கம்பீர் போலத்தான். முன்னாள் வீரர்களின் அனுபவம் நமக்கு உதவும், சில வீரர்கள் அதனால் சவுகரியமாக உணர்வார்கள். அது அவர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு அது உத்வேகமாக இருக்காது. எப்படியிருந்தாலும் உணர்ச்சிவசப்படும் நபர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com