ஆசிய கோப்பை: இந்திய அணியின் தொடக்க ஜோடியை தேர்வு செய்த முன்னாள் வீரர்

image courtesy:PTI
இந்திய அணியின் தொடக்க ஜோடியில் ஒரு இடத்திற்கு சுப்மன் கில் - சாம்சன் இடையே போட்டி நிலவுகிறது.
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆன அபிஷேக் சர்மாவுக்கு இடம் உறுதி. மற்றொரு தொடக்க ஆட்டக்காராக துணை கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் சுப்மன் கில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார். இதனால் டி20 அணிக்கு அவர் திரும்பியுள்ளார். அதோடு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும், ஜிதேஷ் சர்மாவும் உள்ளனர். இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும்.
சுப்மன் கில் அணிக்குத் திரும்பியிருப்பதால், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த சஞ்சு சாம்சனின் இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுப்மன் கில், அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி நிலவுகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “முதல் மூன்று இடங்களில் அவர் (சாம்சன்) மிகவும் ஆபத்தானவர். அங்கேதான் உங்களுக்காக அவர் போட்டிகளை வென்று கொடுப்பார். அவரை அங்கேயே விட்டுவிட வேண்டும். கில்லுக்குப் பதிலாக சாம்சனை மாற்றுவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக சாம்சன் ஒரு வலுவான சாதனையைப் படைத்துள்ளார். கில் கூட அவரை நெருங்குவது கடினமாக இருக்கும். கில் வேறொருவருக்குப் பதிலாக வரலாம். ஆனால் சாம்சன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடிய விதத்தை தொடர வேண்டும். ஏனெனில் தொடக்க வீரராக அவர் பெரிய ரன்கள் மற்றும் சதங்கள் அடித்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்” என்று கூறினார்.






