ஆசிய கோப்பை: இந்தியா வலுவான அணிதான் ஆனால்... - பாக்.முன்னாள் வீரர்

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது.
அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலகக்கோப்பை அடிப்படையில் மாற்றப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த தொடரில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை எதிர்கொள்கிறது.
இதில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ள இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 14-ந்தேதி அரங்கேறுகிறது. இந்த போட்டியில் தங்களது அணிதான் வெற்றி பெற வேண்டும் என்று இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் இந்தியா மிகவும் வலுவாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் குல் தெரிவித்துள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் வெளிப்படுத்தும் ஒரு நல்ல செயல்பாடு வெற்றியை மாற்றக்கூடியது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்ல வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நாம் பாகிஸ்தான் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய அணி வலுவாகத் தோன்றினாலும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சிறந்த பேட்டிங் அல்லது பந்துவீச்சு செயல்பாடு ஆட்டத்தை மாற்றிவிடும். பாகிஸ்தான் தங்கள் பந்துவீச்சால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தலாம். பாகிஸ்தான் வென்ற அனைத்து முக்கிய தொடர்களும் பந்துவீச்சாளர்கள் மூலமாகவே வந்தவை. இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற நட்சத்திரங்களை ரசிகர்கள் நிச்சயமாக தவற விடுவார்கள்” என்று கூறினார்.






