ஆசிய கோப்பை: எங்களால் இந்தியா உள்பட எந்த அணியையும்.. - யுஏஇ கேப்டன் சவால்

image courtesy:ICC
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதுகிறது.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - யுஏஇ அணிகள் மோதுகின்றன. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முழு திறமையையும் வெளிப்படுத்தினால் இந்தியா உள்பட எந்த அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என்று யுஏஇ கேப்டன் முகமது வாசீம் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ஆசிய போட்டிக்காக கடந்த 2-3 மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறோம். டி20 கிரிக்கெட்டில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி சரியாக செயல்பட்டு முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்தியா உள்பட எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும். ஓமனை நாங்கள் வீழ்த்தி விடுவோம். மற்ற இரு அணிகளில் ஒன்றை வீழ்த்தி சூப்பர்4 சுற்றை எட்டுவதே எங்களது இலக்கு” என்று கூறினார்.






