இந்தியாவுக்கு எதிரான தோல்வி; ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியது என்ன..?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
image courtesy: @BCCI / X (Twitter) / File Image 
image courtesy: @BCCI / X (Twitter) / File Image 
Published on

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் இந்த போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக அடித்ததாக நினைக்கிறேன். இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதன் காரணமாகவே அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சின் போது அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். கூடுதலாக பீல்டிங்கும் அவர்களுக்கு மிகச்சிறந்ததாக இருந்தது.

எனவே இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் நல்ல போட்டியாக இருந்திருக்கும். டிம் டேவிட் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அனுபவ வீரராக ஸ்டாய்னிஸ், டிம் டேவிட்டுடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார்.

டி20 போட்டிகளின் போது சிறிய வித்தியாசத்தில் தான் மாற்றம் நடைபெறும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்ததாலே தோல்வியை சந்தித்தோம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com