சாய் சுதர்சன் அதிரடி... ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

image courtesy: IndianPremierLeague twitter
20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
ஆமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 23-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 3-வது ஓவரிலேயே ஜோப்ரா ஆர்ச்சரிடம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மற்றொருபுறம் களமிறங்கிய ஜோஸ் பட்லர், ஷாருக்கான் இருவரும் சிறப்பாக விளையாடி தலா 36 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. ராகுல் திவாட்டியா 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் மகீஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே இருவரும் தலா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா இருவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.






