ஐ.சி.சி. உலகக்கோப்பை: உலக சாதனை படைத்த ஷபாலி வர்மா

image courtesy:twitter/@BCCIWomen
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா ஆட்ட நாயகி விருது வென்றார்.
மும்பை,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின.
மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வோல்வார்ட் 101 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளும் அள்ளினர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய ஷபாலி வர்மா ஆட்ட நாயகி விருதை வென்றார்.
இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகி விருது வென்ற ஷபாலி வர்மாவுக்கு வயது 21 ஆண்டுகள் 279 நாட்கள்தான். இதன் மூலம் ஐ.சி.சி. ஆண்கள் மற்றும் மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைந்த வயதில் ஆட்ட நாயகி விருதை வென்ற வீராங்கனை என்ற உலக சாதனையை ஷபாலி படைத்துள்ளார்.






