சர்வதேச டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா


சர்வதேச டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
x

image courtesy:PTI

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர்4’ சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர்.

முன்னதாக ‘டாஸ்’ போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது.

அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது. கைகுலுக்க மறுத்த சர்ச்சை அதைத்தொடர்ந்து அரங்கேறிய புறக்கணிப்பு மிரட்டல் பிரச்சினை ஓய்ந்த சில தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 11 ஆட்டங்களில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே இந்த ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்பது பலரது கணிப்பாக உள்ளது. முன்னதாக லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story