ஐ.பி.எல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகும் அபிஷேக் நாயர்..?

image courtesy:PTI
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல்.தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான (2026) பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன.
இந்த சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டன் ரகானே தலைமையில் விளையாடி 8-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இதனால் அடுத்த சீசனுக்கு முன் அந்த அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படியே, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். மேலும் அந்த அணி நிர்வாகம் டிரேடிங் முறையில் வீரர்களை வாங்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் எதிர்வரும் சீசனுக்கான கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






