ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

image courtesy:PTI
ஆர்சிபி அணியை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது.
இந்தநிலையில் பிரிட்டனின் டயாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்சிபி அணியை நிர்வகித்து வந்த நிலையில், ஆர்சிபி அணியை அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளது. பெங்களூரு அணியின் தற்போதைய மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.17,240 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆர்சிபி அணியை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. குரூப்பின் பார்த் ஜிண்டால், ரவி ஜெய்புரியாவின் தேவ்யானி சர்வதேச குழுமம், அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் என பல தொழிலதிபர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில், 'கேஜிஎப்', 'காந்தாரா', 'சலார்' திரைப்படங்களைத் தயாரித்த 'ஹாம்பலே பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் ஆசிபி அணியை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






