அதிரடியில் மிரட்டிய ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான்.. அரியானாவை வீழ்த்தி மும்பை வெற்றி

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சூப்பர் லீக் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

புனே,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் சூப்பர் லீக் சுற்று புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. சூப்பர் லீக்குக்கு தகுதி பெற்று இருக்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ஆந்திரா, பஞ்சாப்பும், பி பிரிவில் மும்பை, அரியானா, ராஜஸ்தான், ஐதராபாத்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இதில் பி பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மும்பை - அரியானா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஷர்துல் தாகூர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அங்கித் குமார் 89 ரன்களும், நிஷாந்த் சந்து 63 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் சாய்ராஜ் படில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி சதமடித்தார். 50 பந்துகளில் 101 ரன்கள் அடித்த நிலையில் அவர் கேட்ச் ஆனார்.

அவருக்கு அடுத்து வந்த வீரர்களில் அதிரடியில் மிரட்டிய சர்பராஸ் கான் வெறும் 25 பந்துகளில் 64 ரன்கள் அடித்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

வெறும் 17.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் அடித்த மும்பை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com