ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கிய நியூசிலாந்து

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
image courtesy:twitter/@BLACKCAPS
image courtesy:twitter/@BLACKCAPS
Published on

வெலிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நியூசிலாந்தை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 222 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி ஓவர்டான் 68 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கான்வே (34 ரன்கள்) மற்றும் ரச்சின் ரவீந்திரா (46 ரன்கள்) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினாலும் டேரில் மிட்செல் (44 ரன்கள்) மற்றும் மிட்செல் சாண்ட்னர் (27 ரன்கள்) பொறுப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். முடிவில் நியூசிலாந்து 44.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

அத்துடன் நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியது. டேரில் மிட்செல் தொடர் நாயகன் விருதை வென்றார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com