ஷெப்பர்ட் அதிரடி அரைசதம்... சென்னைக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி

image courtesy: @IPL / @ChennaiIPL / @RCBTweets
ஆர்.சி.பி. தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து பெங்களூருவின் தொடக்க வீரர்களாக விராட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதன் காரணமாக பெங்களூரு அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் சென்னை வீரர்கள் திணறினர்.
அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பெத்தேல் 55 ரன்னிலும், விராட் 62 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த படிக்கல் 17 ரன், ஜித்தேஷ் சர்மா 7 ரன், ரஜத் படிதார் 11 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய ஷெப்பர்ட் 14 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. ஆர்.சி.பி. தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை ஆட உள்ளது.






