பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை கேப்டன் அசலங்கா

நாடு திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.
பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை கேப்டன் அசலங்கா
Published on

கொழும்பு,

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக இன்று தொடங்கும் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் 3-வது அணியாக ஜிம்பாப்வே களம் காணுகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் ராவல்பிண்டியில் இன்று மோதுகின்றன.

இதற்கிடையே, இஸ்லாமாபாத் கோர்ட்டு வளாகத்தில் தற்கொலைப்படை தாக்குதலால் அச்சமடைந்த இலங்கை வீரர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்ப விரும்பினர். ஆனால் பாகிஸ்தான் அரசு முழுமையான பாதுகாப்பு அளிக்க உத்தரவாதம் அளித்திருப்பதால், தொடர்ந்து போட்டிகளில் விளையாட வேண்டும். அதையும் மீறி நாடு திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.

இந்த நிலையில் இலங்கை கேப்டன் சாரித் அசலங்கா, வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் உடல்நலக்குறைவால் தாயகம் திரும்ப இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் எந்த மாதிரியான பாதிப்பு என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அசலங்காவுக்கு பதிலாக தசுன் ஷனகா இலங்கை அணியை வழிநடத்த உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com