விஜய் ஹசாரே கோப்பை: கோலி அபார சதம்...டெல்லி வெற்றி

விராட் கோலி 131 ரன்கள் எடுத்தார்.
மும்பை,
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி - ஆந்திரா அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, பண்ட் விளையாடினர்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆந்திரா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ரிக்கி புய் சதமடித்து 122 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியில் விராட் கோலி, நிதிஸ் ராணா, பிரியன்சி ஆர்யா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.ராணா 77 ரன்கள் , பிரியன்சி ஆர்யா 74 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.அவர் 131 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 37. 5 ஓவர்களில் டெல்லி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






