விஜய் ஹசாரே கோப்பை: சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் ஹசாரே கோப்பை தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது.
பெங்களூரு,
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நாளை முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
இந்த தொடரின் போட்டிகளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்திலும் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருந்தது. விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோரை உள்ளடக்கிய விஜய் ஹசாரே டெல்லி அணியின் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஏனெனில் இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வென்று அசத்தியது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல் - மந்திரி டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசினர்.
அதன்பிறகு டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
அதன்படி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதற்கட்டமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டிகளுக்கு சுமார் 3,000 ரசிகர்கள் வரை அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அந்த சூழலில் நாளை தொடங்கும் இந்த தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த போட்டியில் டெல்லி - ஆந்திரா அணிகள் விளையாட இருந்தன.
இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ.-ன் சிறப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பெங்களூருவில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது விராட் கோலியை காணும் ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.






