கில், ஸ்ரேயாஸ் மீண்டும் களத்திற்கு திரும்புவது எப்போது..? இந்திய பயிற்சியாளர் அப்டேட்

image courtesy:PTI
சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை.
ராஞ்சி,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரில் காயம் காரணமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. சுப்மன் கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது கழுத்து வலியால் வெளியேறினார். அந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
மறுபுறம் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஐ.சி.யூ.-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது வேகமாக குணமடைந்து வருகிறார். இருப்பினும் அவர் முழுமையாக உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்டுள்ளார்.
இந்நிலையில் இருவரின் உடற்தகுதி குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இரு தினங்களுக்கு முன்பு சுப்மன் கில்லிடம் பேசினேன். அவர் கழுத்து வலி பிரச்சினையில் இருந்து நன்றாக மீண்டு வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை தொடங்கி விட்டார். அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறினார்.






