மகளிர் உலகக்கோப்பை: ஸ்மிருதி, பிரதிகா அதிரடி...இந்திய அணி 330 ரன்கள் குவிப்பு

48.5 ஓவரில் இந்திய அணி 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது
விசாகப்பட்டினம்,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ரவல் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். நிலைத்து ஆடிய இருவரும் அரைசதமடித்தனர்.
தொடக்க விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பிரதிகா 75 ரன்களுக்கு வெளியேறினார்.
பின்னர் ஜெமினா 33 ரன்களும், ரிச்சா ஹோஸ் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 48.5 ஓவரில் இந்திய அணி 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அனபெல் சுதர்லாந்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
331 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது.






