ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி

ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர்.
கொல்கத்தா,
அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார். அப்போது இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் கொடிகளை ரசிகர்கள் உயர பிடித்தபடி இருந்தனர்.
மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்பட்டன.
இந்நிலையில் அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கோபமடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தரப்பில் மைதானத்தை சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார்
இதனால் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகக் குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவைஅமைத்துள்ளேன் . இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். என தெரிவித்துள்ளார்.






