உலகக்கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வெண்கலம் வென்று அசத்தல்

image courtesy:PTI
ஜோதி சுரேகா அரையிறுதியில் தோல்வியை தழுவினார்.
நன்ஜிங்,
உலகக் கோப்பை வில்வித்தை இறுதி சுற்று போட்டி சீனாவின் நன்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம் 143-140 என்ற புள்ளி கணக்கில் அலெக்ஸ் ரூயிசை (அமெரிக்கா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் ஜோதி சுரேகா, ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை சந்தித்தார். இதில் ஜோதி சுரேகா 143-145 என்ற புள்ளி கணக்கில் ஆண்ட்ரியாவிடம் தோல்வியை தழுவினார்.
இதையடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜோதி சுரேகா 150-145 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் எல்லா கிப்சனை (இங்கிலாந்து) வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலகக்கோப்பை வில்வித்தை இறுதி சுற்றில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.






