உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்

குர்பிரீத் சிங் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும்
உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்
Published on

கெய்ரோ,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் மயிரிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். குர்பிரீத் சிங், உக்ரைன் வீரர் பாவ்லோ கொரோஸ்டிலோவ் தலா 584 புள்ளிகளை குவித்தனர். 10 புள்ளி இலக்கின் உள்பகுதியில் நெருக்கமாக சுட்டதன் அடிப்படையில் பாவ்லோ தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பிரான்ஸ் வீரர் யான் பியரி லூயிஸ் (583 புள்ளி) வெண்கலப்பதக்கம் வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த 37 வயதான குர்பிரீத் சிங் உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். 2018-ம் ஆண்டிலும் வெள்ளி வென்று இருந்தார்.

இந்த போட்டியின் முடிவில் இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 3-வது இடம் பெற்றது. சீனா 12 தங்கம் உள்பட 21 பதக்கங்களுடன் முதலிடமும், தென்கொரியா 7 தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் 2-வது இடமும் பிடித்தன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com