மாற்றத்தை விதைக்கும்'பேட் உமன்'..!


மாற்றத்தை விதைக்கும்பேட் உமன்..!
x

ஒரு அதிர்ச்சியான ரிப்போர்ட்டை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது தேசிய குடும்ப நல அமைப்பு.

''இந்தியாவில் சுமார் 62 சதவிகித ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்க வசதியில்லாததால், மாதவிடாய் காலத்தில் துணிகளைப் பயன்படுத்தும் அவலம் நிலவுகிறது...''

பத்து வருடங்களுக்கு முன் இது 82 சதவீதமாக இருந்தது. இந்நிலையைப் போக்க மலிவு விலையில் சானிட்டரி நாப் கினைத் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். இவரது சாதனையும், வாழ்க்கையும் அக்ஷய்குமார் நடிப்பில் 'பேட் மேன்' (Pad Man) இந்தி படமாக வெளியாகி சக்கைப்போடு போட்டது நினைவிருக்கலாம்.

அருணாச்சலம் ஏற்றிவைத்த தீபம் தெலுங்கானாவின் ஆதிவாசிப் பெண்கள் வரை ஒளிபாய்ச்சி இருக்கிறது. ஒரு காலத்தில் நாப்கின் என்றாலே 'என்ன...?' என்று கேட்ட அப்பெண்கள், இன்று நாப்கினைத் தயாரிக்கும் அளவுக்கு 'பேட்உமன்' (Pad Women) களாக உயர்ந்து நிற்கின்றனர்.

தெலுங்கானாவின் ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு அமைப்பின் கீழ் இயங்கும் நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்துவதே இந்த ஆதிவாசிப் பெண்கள் தான் என்பது 'ஹைலைட்'. கடந்த பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், மாதத்துக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் யூனிட் நாப்கின்களை உற்பத்தி செய்தது.

அவற்றை விற்பனை செய்யாமல், ஆதிவாசிப் பெண்களுக்கும், ஆசிரம பள்ளி மாணவிகளுக்கும் இலவசமாக வழங்க, பேட் உமன்களின் புகழ் தெலுங்கானாவின் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

ரசாயனங்கள் இல்லை, 100 சதவிகிதம் இயற்கை பொருட்கள், மலிவான விலை என்பதால் நகரப் பெண்களும் ஆதிவாசிப் பெண்களின் தயாரிப்பை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆர்டர்கள் அதிகரிக்க, நான்கு இடங்களில் கிளைகளை விரிவாக்கம் செய்திருக்கிறது பழங்குடி மேம்பாட்டு அமைப்பு.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசிப் பெண்களுக்கு நாப்கின் தயாரிக்கும் தொழிற்பயிற்சி, தெலுங்கானாவில் உள்ள அனைத்து ஆதிவாசிப் பெண்களுக்கும் மாதந்தோறும் இலவச நாப்கின், மூன்று மாதத்தில் 40 ஆயிரம் யூனிட் உற்பத்தி என்ற இலக்குகளோடு இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறது பேட் உமன்களின் டீம். விரைவில் 'பேட் உமன்' என்ற திரைப் படத்தை எதிர்பார்க்கலாம்!


Next Story