விலங்குகளின் மொழி இவருக்கு புரியும்...!


விலங்குகளின் மொழி இவருக்கு புரியும்...!
x
தினத்தந்தி 22 July 2023 8:47 AM GMT (Updated: 22 July 2023 8:52 AM GMT)

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நாயுடன் 5 நிமிடம் நேரம் செலவழித்து, அதற்கு கிட்னியில்தான் பிரச்சினை என்று கண்டறிந்து சொல்லி யிருக்கிறார், டேனியல் மெக்னென். பின்பு டாக்டர்கள் சோதித்து அதை உண்மை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் மெக்னென் என்ற பெண்ணுக்கு விலங்குகள் பேசுவதெல்லாம் புரிகிறதாம். பிறவியிலேயே காது கேளாதவராகப் பிறந்த இவர், இந்தக் குறைபாட்டினாலேயே மனதோடு பேசும் திறனை தான் வளர்த்துக் கொண்டதாகவும், அதனால்தான் தன்னால் எல்லா மிருகங்களோடும் சரளமாகப் பேச முடிகிறது என்றும் கூறுகிறார்.

மனிதர்களுக்கு உடம்பு முடியவில்லை என்றால் 'தலை பாரம், லேசாக பீவரிஷ், அப்படியே கொஞ்சம் வயிற்று வலி' என்று டாக்டர்களையே குழப்பும் அளவுக்கு பிரச்சினைகளைச் சொல்கிறோம். ஆனால், வளர்ப்புப் பிராணிகள்...?

மாரடைப்பு உட்பட நம்மைப் போலவே எல்லா நோய்களும் அவற்றுக்கும் வரும் என்றாலும், எங்கு வலிக்கிறதென்று சொல்லத் தெரியாததால் அவை நோயோடு போராடி செத்து மடிகின்றன. இந்த இடத்தில்தான் இவரது அதிசயத் திறமை உதவி செய்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நாயுடன் 5 நிமிடம் நேரம் செலவழித்து, அதற்கு கிட்னியில்தான் பிரச்சினை என்று கண்டறிந்து சொல்லியிருக்கிறார், டேனியல் மெக்னென். பின்பு டாக்டர்கள் சோதித்து அதை உண்மை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

தகுந்த சிகிச்சையால் 'நலா' என்ற அந்த நாய் இன்று உயிர்பிழைத்திருக்க இவர்தான் காரணம் என்று நன்றி நவில்கிறார்கள், நாயின் உரிமையாளர்கள்.

இது போதாதா? இன்று இங்கிலாந்தே காத்திருக்கிறது இவரது அப்பாயின்ட்மென்ட் வேண்டி!

தங்கள் செல்லப் பிராணி சோர்வாக இருந்தாலோ, அடிக்கடி இயல்பை மீறிக் கத்தினாலோ இவரைக் கூப்பிட்டு விடுகிறார்கள் மக்கள். நாய் மட்டுமல்லாமல், கோழி, பூனை, அணில்... ஏன், மலைப்பாம்புகளிடம் கூட பேசி, அவற்றுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுச் சொல்லிவிடுகிறாராம் டேனியல் மெக்னென். இதற்காக அவர் பெறும் தொகை ஒரு 'கிளையன்ட்'டுக்கு 100 யூரோ... அதாவது, சுமார் 9211 ரூபாய்!

''அடிப்படையில் நான் ஒரு முடி திருத்துனர். என் வாடிக்கையாளர் ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தபோதுதான், பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது செல்லப் பிராணியின் மன குரலைக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு இப்படி ஒரு சக்தி இருப்பது எனக்கே தெரிந்தது'' என்கிற டேனியல் மெக்னென், விலங்கு உலகுக்கும் மனித உலகுக்குமான ஒரு பாலம் என்று தன்னை வர்ணிக்கிறார்.

தற்போது வருடத்துக்கு 1500 கிளையன்டுகளை சந்திக்கும் டேனியல் மெக்னென், விலங்குகளிடம் எதுவும் பேசுவதில்லை. அவை சொல்வதை மட்டும் கேட்டு, ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொள்கிறார். இந்த உரையாடல் வெறும் வைப்ரேஷன்களால் ஆனது என்பதால், இறந்த பிராணிகளைக் கூடத் தொட்டுப் பார்த்து அது எதனால் இறந்ததென்று தன்னால் சொல்ல முடியும் என்கிறார், டேனியல் மெக்னென்.

இவர் சொல்வது, உண்மையோ, பொய்யோ... ஆனால் தங்களின் செல்லப்பிராணிகளின் நலன் கருதி, 100 யூரோக்களை செலவழிப்பதற்கு இங்கிலாந்து மக்கள் தயாராக உள்ளனர்.


Next Story