அழகும் ஆபத்தும் நிறைந்த அண்டார்டிகா


அழகும் ஆபத்தும் நிறைந்த அண்டார்டிகா
x
தினத்தந்தி 30 May 2023 4:30 PM GMT (Updated: 30 May 2023 4:30 PM GMT)

அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் உலகின் 7-வது கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது.

இதன் காரணமாக அண்டார்டிகா முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 6 மாதங்கள் சூரியனின் வெளிச்சமே இங்கு இருக்காது. ஆண்டு முழுவதும் 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே மழை பெய்யும் பனி பாலைநிலம் அண்டார்டிகா. இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதம் இங்கே உள்ளது. ஆனால் மக்களுக்கு பயன்படவில்லை. அண்டார்டிகாவில் ஏறத்தாழ 5 ஆயிரம் மீட்டர் (16 ஆயிரம் அடி) அளவுக்கு தரையில் ஆழ்துளையிட்டால் தான் மண்ணை பார்க்க முடியும். ஏனெனில் 98 விழுக்காடு பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. பலகோடி ஆண்டுகளாக உருகாத பனிப்பாலைவனமாக அண்டார்டிகா விளங்குவதால் எப்பொழுதும் தாங்க முடியாத குளிர்ச்சியே அங்கு இருக்கும்.

அண்டார்டிகா 14.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு, 5-வது பெரிய கண்டமாகவும் திகழ்கின்றது. உலகிலேயே கொடுமையான 89 டிகிரி செல்சியல் குளிர் நிலவுவதால் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதுமில்லை. துணிச்சலாக ெசன்ற பல சுற்றுலா பயணிகள் உயிரை இழந்து இருக்கிறார்கள்.

அண்டார்டிகாவில் வின்சன் மாஸிப் என்ற 4892 மீட்டர் உயரமுள்ள மலை சிகரம் உண்டு. ஆனால் அது நமது எவரஸ்ட் சிகரத்தை விட பாதி உயரம்தான்.அதே போல் அங்கே ரோஸ் ஐலன்ட் எனும் தீவில் மவுண்ட் எருபஸ் என்ற எரிமலையும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அங்கே 70 அழகிய குடிநீர் ஏரிகளும் உள்ளன.

கண்ணுக்கு எட்டிய தூரம் ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும் அண்டார்டிகா, முதலில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைதந்தாலும் தொடர்ந்து தங்க முடியாத வெறுப்புணர்ச்சியை தோற்றுவிக்கும்.

திடீர் திடீரென அண்டார்டிகாவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசும். அண்டார்டிகாவில் குளிரால் ஏற்படும் ஆபத்தை விட பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகம் என்று கூறலாம். பூமியில் அதிர்ச்சி அல்லது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாளங்களில் பிளவுகள் உண்டாகும். உடைந்த பகுதி கடற்கரைைய நோக்கி மெல்ல நகரும். அதுசமயம் குளிரின் தாக்கம் அதிகமானால், நகர்ந்த பாளங்கள் அப்படியே நிற்க, புதிதாக விழும் பனியானது அப்பிளவுகளை லேசாக மூடிவிடும். இதனை பனிப்பிளவு என்கின்றனர் புவியியல் அறிஞர்கள். பார்ப்பதற்கும் பனிமலைகள் சூழ்ந்து அழகிய தோற்றம் தரும் அண்டார்டிகா உண்மையில் காட்சி பொருளே. பூமியை போல் அங்கு மனிதர்களால் வசிக்க முடியாது. ஆனால் வெப்பமயமாதல் காரணமாக பூமி பல்வேறு இன்னல்களை சந்திக்க உள்ளதாக அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமாவதால் அண்டார்டிகாவில் உள்ள பனி மலைகள் உருகி வருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்கிறது.

மரங்கள் மட்டுமே கார்பன்டை ஆக்சைடை உள் இழுத்து நல்ல ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அதனால் மரங்கள் வளர்ப்போம். பூமியை காப்போம்.


Next Story