மாணவரும் சமூகநல தொண்டும்


மாணவரும் சமூகநல தொண்டும்
x

மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர் இந்த அமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார் சிவனடியார் திருநாவுக்கரசர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர் ஆற்றவேண்டிய கடமைகள் பல உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள், அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.

ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கி கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தில் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.

மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர் இந்த அமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம். அதில் தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம். செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம். அரசின் செய்தித்துறையினர் உதவியுடன் வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு ஆகிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க் கலாம்.

கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் உதவி பெற்று கோழிப்பண்ணைகள் வைத்தல், தேனீ வளர்த்தல், பாய்பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய வழிகாட்டலாம். நகர் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசாருடன் சேர்ந்து பணியாற்றலாம்.

இவையில்லாமல் மாணவர்கள் தங்கள் படிக்கும் பள்ளியில் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர் களுக்கு, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவவேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவரை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம். புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும்போது அவற்றால் பாதிக்கும் மக்களுக்காக நிதி திரட்டியும், ஆடை, உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் போன்றவற்றை சேகரித்தும் வழங்கலாம். மஞ்சள்காமாலை, போலியோ நோய் தடுப்பு பிரசாரங்களில் தாமாக முன்வந்து ஈடுபடலாம்.

நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழவேண்டும். நல்ல வழியில் சென்று நாட்டுக்கும், வீட்டுக் கும் நற்பெயர் பெறவேண்டும்.


Next Story