நிறவெறி பாகுபாடு: திரிஷா, மாளவிகா எதிர்ப்பு


நிறவெறி பாகுபாடு: திரிஷா, மாளவிகா எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 1:48 AM GMT (Updated: 4 Jun 2020 1:48 AM GMT)

நிறவெறி பாகுபாட்டிற்கு நடிகை திரிஷா, மாளவிகா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை வெள்ளை போலீஸ்காரர் கழுத்தை முட்டிக்காலால் நெரித்து கொன்ற சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இனவெறியால் நடந்த இந்த படுகொலையை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கொலையை நடிகை திரிஷா தனது சமூக வலைத்தளத்தில் கண்டித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் நிறவெறி குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘’நான் சிறுவயதிலேயே நிறவெறியை சந்தித்து இருக்கிறேன். நிறவெறி பாகுபாடு நமது நாட்டிலும் இருக்கிறது. தென்னிந்தியர்கள் அனைவரும் கருப்பர்கள் என்ற எண்ணம் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு உள்ளது. ஆப்பிரிக்காவில் வசிப்பவர்களை நிறத்தை வைத்து அழைக்கும் பழக்கமும் நம்மவர் இடையே இருக்கிறது. கருப்பு நிறம் மோசம் இல்லை. அதுவும் அழகுதான். உலக நிறவெறி பற்றி நாம் பேசும்போது நமது வீடு, சமூகம் மற்றும் நண்பர்களை சுற்றி நடக்கும் இனவெறி, நிறவெறி துவேஷங்களையும் உணர வேண்டும். ஒவ்வொரு நாளும் இரக்கம் உள்ள மனிதர்களாக வாழ்வது நம்மை அழகானவர்களாக மாற்றும் நிறம் உங்கள் தேகத்தில் இல்லை.

இவ்வாறு மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

Next Story