நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல கோர்ட்டு அனுமதி


நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 5 Aug 2023 10:54 PM GMT (Updated: 6 Aug 2023 5:39 AM GMT)

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்காவுக்கு செல்ல டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சிறையில் உள்ள கணவருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விளக்கம் அளித்தும் வருகிறார். மேலும், இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் தற்போது ஜாமினில் உள்ளார். ஆனால், அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், விளம்பர நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளதால் அதற்கு அனுமதி தரும்படி ஜாக்குலின் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கியது. அதேவேளை, ஜாக்குலின் 1 கோடி ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டுமெனவும் கோர்ட்டு நிபந்தனை விதித்தது. மேலும், முழுமையான பயண விவரங்களை தெரிவிக்க வேண்டுமெனவும் கோர்ட்டு நிபந்தனை விதித்தது. நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதாக ஜாக்குலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் அமெரிக்கா செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கியது.


Next Story